Pages

Subscribe Twitter Twitter

Saturday, August 20, 2011









இலங்கை அணி.. கவனஞ் செலுத்த வேண்டியவை..


 இன்று இடம்பெற்ற தொடரைத் தீர்மானிக்கும் முக்கிய கிறிக்கெற் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவி இந்திய அணிக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்து இந்திய அணி விசிறிகளை சீண்டிய எங்களைப் போன்றவர்களிற்கு எல்லாம் மரண அடி வாங்கித் தந்துள்ளது. அடுத்த போட்டியிலாவது இலங்கை அணி வென்று மீண்டு எங்களைப் போன்றவர்களை பழையபடி சீண்டிப்பார்க்கும் போமிற்கு திரும்பச் செய்யுமோ என் நாமே குப்புறப் படுத்துச் சிந்தித்திருந்த வேளையில் கிறிக்கெற் பதிவெழுதாத நீயெல்லாம் ஒரு பதிவரா என நண்பனொருவன் வெந்த புண்ணில் வேல் பாச்சிவிட்டான்.


இலங்கை அணிக்கு ஆலோசனைகளை வழங்கி அணியை அடுத்த போட்டியிலாவது வெல்லச் செய்ய எதற்கும் சளைக்காமல் இலங்கை அணிக்காக வாதாடும் அமரேசைத் தொடர்பு கொள்வோமென்று பார்த்தால் அவர் தொடர்பு வலையமைப்புக்கு இப்பாலோ அப்பாலோ சென்றுவிட்டதால் ..இதோ நானே களத்தில் இறங்கி விட்டேன். இதோ எனது ஆலோசனைகள்.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் இப்போதெல்லாம் தடுமாறுவதால் இன்னும் இரண்டு துடுப்பாட்ட வீரர்களை அணியிலிருந்து தூக்கிவிட்டு பந்துவீச்சாளர்கள் இருவரை அணியில் இணைக்கலாம்.தொடரை ஏற்கனவே இழந்து விட்டதால் அடுத்த போட்டியில் உலகில் மிக நீண்ட வால் (அது தாங்க tail end) கொண்ட அணியென்ற கிண்ணஸ் சாதனையை இலக்கு வைத்து பத்துப் பந்து வீச்சாளர்களும் ஒரு விக்கெட் காப்பாளருமாக ஒரு அணியைத் தெரிவு செய்யலாம். முடிந்தால் இந்திய அணித் தலைவர் டோணி போலப் பகுதி நேரமாகப் பந்து வீசக்கூடிய விக்கெட் காப்பாளர் ஒருவரை இணைப்பது அணிக்கு மேலும் வலுச் சேர்த்து சாதனையை மேலும் வலுவாக்கும்.

எத்தனை முழுநேரப் பந்து வீச்சாளர்கள் அணியிலிருந்தாலும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தான் ஆரம்ப பந்துப் பரிமாற்றங்களை வீசி முடிக்கவேண்டும். முடிந்தால் லசித் மலிங்கவிற்கு ஓவரே கொடுக்காமல் அதனையும் பகுதி நேரப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி முடிக்கச் செய்யலாம்.

எப்போதோ ஒரு உலகக் கிண்ணத் தொடரில் சில ஐம்பதுகளை அடித்ததோடு மட்டுமல்லாமல் அணி தோற்கும் போதெல்லாம் ஐம்பது அடித்து சாதனை படைக்கும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சாமர சில்வாவை தலைவராக நியமித்துப் அணியைத் தூக்கி நிறுத்துவதோடு மைந்தன் சிவா போன்ற விமர்சகர்களிற்குத் தகுந்த பதிலடி கொடுக்கலாம். அதுவும் அவரைத் துடுப்பாட்ட வீரராகவே கணிக்க முடியாது எனக் கருத்துக் கூறும் கன்கோன் போன்றவர்களை 4 துடுப்பாளர்+5 பந்து வீச்சாளர் + அணித்தலைவர் எனக் கருத்துக் கூறச் செய்யலாம். 

எல்லாவற்றிற்கும் மேலாக ”சுழற்றக் காத்திருக்கும் இலங்கை ” எனப் போட்டி தொடங்க முதலே ஆரூடம் கூறி எவ்வளவு அடி வாங்கினாலும் சளைக்காத எங்கள் விக்கிரமாதித்தன் லோசன் அண்ணாவின் வலைப்பூவை இலங்கை தொடர்பான போட்டித் தொடர்கள் ஆரம்பிக்க முதலே ஏதாவது தொழினுட்ப முறைகளைக் கையாண்டு உத்தியோகப்பற்றற்ற முறையிலே முடக்க வேண்டும். 

7 தடவை துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கப் போய் சகல தடவையும் இலங்கை அணியைத் தோற்கடிக்கச் செய்த அஷ்வின் போன்றவர்களையெல்லாம் ஏதாவது தடைச்சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டு அடுத்த போட்டிக்கு மைதானப் பக்கமே வரவிடாமல் செய்து இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

யாரது..?? எனது பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சொல்லி மகஜர் தாயாரிப்பது..!!
பி.கு: யாவும் கலப்படமற்ற கற்பனை










அமெரிக்கா.. கருத்து.. மாற்றுக் கருத்து..



உண்மையிலேயே நாமெல்லாம் எமக்கு அருகில், எம்மைச் சூழ எம்மையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்ற விடயங்களைப் பற்றியெல்லாம் அடிப்படையிலிருந்து அறிந்து வைத்திருக்கின்றோமா என்பதில் எனக்கு நீண்டகாலமாகவே ஒரு சந்தேகம்.

 முதலில் இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள்.அவர்களது விடைகளையும் கருத்துக்களையும் அவதானமாகக் கவனியுங்கள்..


சிரிப்பை அடக்கமுடியாதவர்கள் நன்றாகவே சிரித்துவிட்டு விடயத்திற்கு வாருங்கள்.


எங்களில் பலரும் இப்படியானவர்களாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.
Facebook ல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முற்பட்டுத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுபவர்கள் பலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எங்கள் நண்பர் குழுவிடையே வழமை போலவே ஆரம்பித்த விவாதமொன்று நீண்டு ..வழமை போலவே முடிவேதும் இல்லாமல் முடிவடைந்துவிட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படைச் சந்தேகங்கள் இது தான்..

  • எதற்கெடுத்தாலும் தங்கள் கருத்தைக் குறிப்பிடுபவர்கள் இருக்கிறார்களே. அவர்கள் எத்தனை சதவீதமானவர்கள் விடயத்தின் ஆழத்தை புரிந்து  கருத்துத் தெரிவிக்கிறார்கள்..? ?
  • உண்மையிலேயே எல்லா விடயத்திலும் ஒருவனிற்கு சொந்தக் கருத்து இருக்க வேண்டுமா..?? சில விடயங்களில்  தனக்கென சொந்தக்கருத்தெதுவும் இல்லாமல் இருப்பதில் தவறேதுமிருக்கிறதா..?? 
  • மாற்றுக் கருத்து..மாற்றுக் கருத்து என்கிறார்களே.. அப்படி மாற்றுக் கருத்துக் கூறுபவர்களில் ஏறக்குறைய சகலருமே ஏன் எல்லாக்கருத்துக்குமே மாற்றுக் கருத்துக் கூறுகிறார்கள்..?? 
  • எது கருத்து ..??எது மாற்றுக்கருத்து..?? அநேகமானவர்கள் தெரிவிப்பதற்கு மாறாகத் தெரிவிப்பது தானா மாற்றுக்கருத்து..?? ;-)


யாரது..??இப்பவே கண்ணைக் கட்டுதே என்பது..
 சரி சரி .. பிழைத்துப் போங்கள்.



Tuesday, August 2, 2011









புற்றுநோய்க்கெதிரானதொரு பாரிய போர்.. தொடர்கின்றது..

கடந்த மாதம் முதலாம் திகதி தேவேந்திர முனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட "பாதை" எனப் பெயரிடப்பட்ட பிரமாண்ட நடைபயணம் இருபத்தேழாம் திகதி பருத்தித்துறை முனையை வந்தடைந்தது. 

குறைந்தது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதன் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதே நடைபயணத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. ஆனாலும் ஏறக்குறைய 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையே அவர்களால் இதுவரை திரட்ட முடிந்துள்ளது. எனவே, உரிய இலக்கினை அடைவதற்காக மேலும் நன்கொடைகள் எதிபார்க்கப்படுகிறன.                                                                         இறுதி நாளன்று இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜெயவர்தன அவர்களால் தெல்லிப்பளையில் புதிய கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது.  

  • இது தொடர்பான மேலதிக விபரங்களையும், நன்கொடை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களையும் பெறுவதற்கு இங்கே சொடுக்குங்கள்.
  • இது பற்றிய எனது முன்னைய பதிவிற்கு இங்கே சொடுக்குங்கள்.
  • உத்தியோகபூர்வ இணைய முகவரி .www.trailsl.com